வடகொரியா இந்த ஆண்டின் 8-வது ஏவுகணை சோதனையை இன்று காலை நடத்தியுள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகில் உள்ள சுனானில் இருந்து கிழக்குக் கடற்கரையில் உள்ள கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை இன்று காலை 7.52 மணிக்கு ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைமையகம் கூறியுள்ளது.
இதே தளத்தில் இருந்து ஜனவரி 16 -ஆம் திகதி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட பல ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை அதிகபட்சமாக 620 கி.மீ. தூரம் வரை பறந்தது என்று தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தென்கொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்து வருகிறது. வட கொரியா தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை விரைவாக உருவாக்கி வருகிறது என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி தெரிவித்தார்.
ஜப்பான், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்புக்கு வடகொரியா அச்சுறுத்தல் விடுத்து வருகிறது எனவும் அவா் கூறினார்.
வடகொரியாவின் கடைசியாக ஜனவரி 30-ஆம் திகதி ஹவா சாங்-12 இடைநிலை ஏவுகணையை ஏவியது. 2017 ஆம் ஆண்டிலிருந்து சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகளில் மிகச் சக்தி வாய்ந்ததாக ஹவா சாங்-12 அமைந்திருந்தது. இந்த ஏவுகணை சுமார் 2,000 கி.மீ. வரை பறந்ததாக அறிவிக்கப்பட்டது.
தென் கொரியாவின் மார்ச் 9 -ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சேதனையை வடகொரியா நடத்தியுள்ளது.
இதேவேளை, இந்த ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க அவசர கூட்டத்தை தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டியது. இது வருந்தத்தக்கது என தென் கொரிய ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரைத் தீர்க்க உலகம் முயற்சித்து வரும் நேரத்தில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை தென்கொரிய ஏவியுள்ளமை உலக மற்றும் கொரியப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உகந்த செயற்பாடு இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.